நாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வியடைந்தது ஏன்?

1 03 2008
Ambedkar மனித சமூகத்தின் அரசாங்கம், மிகவும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை அடைந்துள்ளது. கொடுங்கோல் மன்னர்களின் எதேச்சதிகாரத்தை, மனித சமூகத்தின் அரசாங்கம் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. நீண்ட நெடிய ரத்தப் போராட்டத்திற்குப் பிறகு இந்த அமைப்பு தூக்கியெறியப்பட்டு, அந்த இடத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற புதிய அரசமைப்பு அமர்ந்தது. அரசாங்கக் கட்டமைப்பில் இதுதான் முடிந்த முடிவு என்றும் கருதப்பட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும், சுதந்திரத்தையும், சொத்துரிமையையும், நல்வாழ்வையும் அளிக்கும் புத்துலகத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையை அது ஏற்படுத்தியது. இத்தகைய நம்பிக்கைகளுக்குப் போதிய ஆதாரங்களும் இருந்தன.நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களின் குரலை எதிரொலிக்க சட்டமன்றம் இருக்கிறது. அந்தச் சட்டமன்றத்திற்குக் கீழ், அதன் ஆணைக்கு உட்பட்டதாக நிர்வாகத் துறை இருக்கிறது. சட்டமன்றத்திற்கும், நிர்வாகத் துறைக்கும் மேல் அவை இரண்டையும் கண்காணிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் அவற்றை வைத்திருக்கவும் நீதித்துறை இருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு மக்கள் அரசாங்கத்திற்குரிய எல்லா அம்சங்களையும் பெற்றுள்ளது. அதாவது, மக்களால் மக்களைக் கொண்டு மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்ற தன்மையை அது கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாடாளுமன்ற ஜனநாயகம் உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒரு நூற்றாண்டு முடிவதற்குள்ளாகவே அதனை எதிர்த்துக் குரல் எழுப்பப்பட்டு வருவது, ஓரளவு வியப்புக்குரிய செய்தியாகவே இருக்கிறது.

இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக அதிருப்தியடையாத நாடுகள் வெகு குறைவாகவே உள்ளன என்றுகூடச் சொல்லலாம். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான இத்தகைய அதிருப்திக்கும், மனக்குறைவுக்கும் காரணம் என்ன? இது, ஆய்வுக்குரிய கேள்வியாகும். இப்பிரச்சினையைப் பரிசீலிக்க வேண்டிய அவசர அவசியம், வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் அதிகம் உணரப்படுகிறது. ஏனெனில், இந்தியாவில்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்வதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. “நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வெளியே தெரிவதைப் போல, அது சிறப்பான ஒன்றல்ல” என்று இந்தியர்களிடம் சொல்வதற்கு, மிகுந்த துணிச்சலுடன் ஒருவர் பெரிதும் தேவைப்படுகிறார்.

நாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வியுற்றது ஏன்? சர்வாதிகாரிகள் உள்ள நாட்டில் அது தோல்வி அடைந்ததற்கு, அது மெதுவாக இயங்கியதே காரணம். எத்தகைய விரைவு நடவடிக்கையையும் அது தாமதப்படுத்துகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், நிர்வாகத் துறைக்கு சட்டமன்றம் முட்டுக்கட்டைப் போடக்கூடும். நிர்வாகத் துறையின் பாதையில் சட்டமன்றம் குறுக்கிடாமல் இருந்தாலும், நீதித்துறை குறுக்கிட்டு, அதன் சட்டங்களைச் செல்லாதவை என்று அறிவிக்கக் கூடும்! அதே நேரம், சர்வாதிகாரம் சுதந்திரமாகச் செயல்படவும், நாடாளுமன்ற ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. இதனால்தான் சர்வாதிகாகள் ஆளும் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் மதிப்பிழந்த ஒரு கோட்பாடாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சர்வாதிகாரிகள் மட்டுமே எதிர்த்தால், அது பற்றி நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான அவர்களது சாட்சியம் உண்மையில் ஒரு சாட்சியமே அல்ல. உண்மையில், நாடாளுமன்ற ஜனநாயகம் சர்வாதிகாரத்திற்கு ஒரு வலிமையான தடை அரணாக இருக்கும் என்பதால், அது வரவேற்கப்படவே செய்யும். எனினும், சர்வாதிகாரத்தை எதிர்க்கும் மக்கள் வாழும் நாடுகளில்கூட, கெட்ட வாய்ப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக மிகுந்த அதிருப்தியே நிலவுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து பெரிதும் வருத்தத்திற்குரிய செய்தி இது.

ஒன்றை மட்டும் பொதுவான முறையில் கூறலாம். சுதந்திரத்திற்கும், சொத்துரிமைக்கும், நல்வாழ்வுக்குமான உரிமையை பெருந்திரளான மக்களுக்கு உறுதி செய்ய அது தவறிவிட்டதே இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இது உண்மை எனில், இந்தத் தோல்விக்கான காரணங்களைத் தெரிந்து கொள்வது முக்கியமாகும். இந்தத் தோல்விக்கு தவறான சித்தாந்தமோ அல்லது தவறான அமைப்பு முறையோ அல்லது இவை இரண்டுமே காரணமாக இருக்கும் என்பதுதான் என்னுடைய கருத்து. நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சிதைத்துச் சீர்குலைத்துவிட்ட தவறான சித்தாந்தத்திற்கு, இங்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கூறினால் போதும் என்று நினைக்கிறேன்.

தொடரும்

அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து.




இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை

1 03 2008

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன? இதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு. தங்களுடைய நாடு ஏற்கனவே ஒரு ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று பெரும்பாலான இந்தியர்கள் மிகவும் பெருமையாகப் பேசுகின்றனர். வெளிநாட்டினர்கூட, இந்தியாவுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் விருந்துகளில் மாபெரும் இந்தியப் பிரதமர் பற்றியும், மாபெரும் இந்திய ஜனநாயகம் பற்றியும் பேசுகின்றனர்.

Ambedkar குடியரசு (Republic) இருந்தால், அங்கு ஜனநாயகம் (Democracy) தழைத்தோங்கும் என்றொரு முடிவுக்கு எல்லோரும் வந்து விடுகின்றனர் என்பது இதன் மூலம் விளங்குகிறது. மேலும், வயது வந்தவர்கள் வாக்களிப்பதன் முலம் உருவாக்கப்படும் நாடாளுமன்றத்தில், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநதிகள், சில சட்டங்களை உருவாக்குவதன் மூலம் அங்கு ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கருதப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், ஜனநாயகம் என்பது அரசியல் சார்ந்த ஒன்றாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா? அல்லது ஜனநாயகம் இந்தியாவில் இல்லையா? உண்மை நிலை என்ன? ஜனநாயகத்தை குடியரசுடனும், நாடாளுமன்ற அரசாங்கத்துடனும் இணைத்துப் பார்ப்பதால் ஏற்படும் குழப்பத்தை நீக்கும்வரை, இதற்கு சரியான பதிலை அளிக்க முடியாது. குடியரசு மற்றும் நாடாளுமன்ற அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து ஜனநாயகம் முற்றிலும் வேறுபட்டது. ஜனநாயகத்தின் வேர், அரசாங்கத்திலோ, நாடாளுமன்றத்திலோ அல்லது இவை போன்ற வேறு எந்த அமைப்பிலோ நிலைப்பெற்றிருக்கவில்லை. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது, ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். இத்தகைய சமூக உறவு முறைகளில்தான் ஜனநாயகத்தின் வேர்கள் கண்டெடுக்கப்பட வேண்டும்.

“சமூகம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது? சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில், “சமூகம்’ இயற்கையாகவே தோன்றியதாக நாம் நினைக்கிறோம். சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் தன்மைகள் பெருமைபடத்தக்கவையாகும். இது, சமூக நோக்குடனும், தொண்டு மனப்பான்மையுடனும், பொது வாழ்வில் நேர்மையுடனும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் வாழும் தன்மைகளைக் கொண்டதாகும்.

இத்தகைய சிறப்புத் தன்மைகள் இந்திய சமூகத்தில் காணப்படுகின்றனவா? இந்திய சமூகம் தனிமனிதர்களைக் கொண்டிருக்கவில்லை. இது, எண்ணற்ற சாதிகளின் தொகுப்பை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது, இந்திய சமுகத்திற்கு மட்டுமே உள்ள தனித்தன்மையான வாழ்வியல் முறையாகும். எனவேதான், இங்கு ஒருவருக்கொருவர் தங்களுடைய அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள மறுக்கின்றனர்; மற்றவர்களுக்கு இரங்கும் தன்மையும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்க, இது குறித்து விவாதிப்பது தேவையற்றது. சாதி அமைப்பு நிலைத்து நீடித்திருப்பது, அச்சமூகத்தின் குறிக்கோளை மறுப்பதாகவும், அந்த வகையில் அது ஜனநாயகத்தையே மறுப்பதாகவும் அமைந்து விடுகிறது.

இந்திய சமூகம், சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, சாதி அடிப்படையில்தான் எல்லாமே ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்திய சமூகத்திற்குள் நுழைந்தால், நீங்கள் மிக வெளிப்படையாக சாதியைக் காண முடியும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண், ஒரு சாதியை சார்ந்தவர்களாக இல்லை என்ற சாதாரண காரணத்திற்காக ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனுடன் உண்ணவோ, திருமணம் செய்த கொள்ளவோ முடியாது. இதே காரணத்திற்காக, ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனைத் தொட முடியாது. அரசியலுக்குச் சென்று அதில் இணைந்து செயல்பட்டுப் பாருங்கள்; அங்கும் சாதி எதிரொலிப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

தேர்தலில் ஒரு இந்தியன் எப்படி வாக்களிக்கிறான்? ஒரு இந்தியன் தன் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களிப்பான். வேறு யாருக்கும் அவன் வாக்களிக்க மாட்டான். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத அளவுக்கு இந்திய காங்கிரஸ் கட்சி, தேர்தல் நலன்களுக்காக சாதி அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது. அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் இது நன்கு விளங்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்களோ, அந்த சாதியைச் சார்ந்திருப்பவரே அந்தத் தொகுதியின் வேட்பாளராக இருப்பதைக் காண முடியும். காங்கிரஸ் கட்சி சாதி அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பதாக ஒரு தோற்றம் இருந்தாலும், அது உண்மையில் சாதி அமைப்பை ஆதரிக்கவே செய்கிறது.

தொழிற்சாலைகளுக்குச் சென்று பாருங்கள். ஒரு தொழிற்சாலையில் உயரிய பதவியில் அதிகளவு சம்பளம் பெறுபவர், அந்த தொழிற்சாலையின் உரிமையாளருடைய சாதியைச் சார்ந்தவராகவே இருப்பார் என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். குறைந்தளவு சம்பளம் பெறும் கடைநிலைப் பணிகளில் மட்டுமே பிற சாதியை சார்ந்தவர்களைக் காண முடியும். வணிகத் துறைக்குச் சென்றாலும் இதே நிலையைக் காணலாம். ஒட்டு மொத்த வணிகத் துறையும் ஒரேயொரு சாதியின் காமாக அமைந்திருக்கிறது. வேறு எவருக்கும் இங்கு அனுமதி இல்லை.

‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ 20.5.1956′ டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு’ : 17 பக்கம் : 519