எனக்கு நானே உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் வெளியேறினேன் – VI

26 11 2008

Ambedkar என் பதவி விலகும் முடிவை எடுக்க இத்தனை காலம் பிடித்ததற்கு காரணங்கள் உண்டு. முதலாவதாக, அமைச்சரவையின் உறுப்பினராக இருந்த பெரும்பாலான காலத்தில், 1950 சனவரி 26 வரை, அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியிலேயே மூழ்கியிருந்தேன். அதற்குப் பிறகு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட வரைவிலும், எல்லைகளை நிர்ணயிக்கும் பணியிலும் கவனம் செலுத்தி வந்தேன். ஏற்றுக்கொண்ட பணியைச் செய்யாமல் விட்டு விட்டுச் செல்வது ஏற்புடையதாக எனக்குத் தோன்றவில்லை. இரண்டாவதாக, இந்து சட்டத் தொகுப்பின் பொருட்டு தொடர்ந்து பதவியில் இருப்பது அவசியம் என்று எண்ணினேன். இந்து சட்டத் தொகுப்பிற்காக பதவியில் நான் நீடித்தது தவறு என்று சிலர் எண்ணக்கூடும். நான் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தேன். இந்து சட்டத் தொகுப்பு இந்த நாட்டின் சட்டமன்றம் மேற்கொண்ட மிகப் பெரிய சமூக சீர்த்திருத்த நடவடிக்கையாகும்.
கடந்த காலத்தில் இந்திய சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட எந்த சட்டமோ, இனி இயற்றக்கூடிய எந்த சட்டமோ – இதற்கு இணையான முக்கியத்துவம் உடையதாக இருக்க முடியாது. வர்க்க ஏற்றத்தாழ்வுகளும் பாலின ஏற்றத்தாழ்வுகளுமே இந்து சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. அதனை அப்படியே விட்டுவிட்டு, பொருளாதார சிக்கல்கள் குறித்த சட்டங்களை மட்டும் இயற்றிக் கொண்டே போவது, நமது அரசமைப்புச் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குவதாகும். இது, சாணிக் குவியலின் மீது அரண்மனையைக் கட்டுவதற்கு ஒப்பானதாகும். இந்து சட்டத் தொகுப்புக்கு நான் வழங்கும் முக்கியத்துவம் இதுதான். இதன் பொருட்டே எனது மன வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நான் பதவியில் நீடித்திருந்தேன்.

ஆகவே நான் ஏதேனும் தவறை செய்திருப்பேனாகில், ஏதேனும் நல்லதைச் செய்யலாம் என்ற நம்பிக்கையில்தான் அவ்வாறு செய்திருப்பேன். இது தொடர்பாக அவையில் பிரதமர் கொடுத்த மூன்று அறிக்கைகளை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 1949 நவம்பர் 28 அன்று பின்வரும் உறுதிமொழிகளைப் பிரதமர் வழங்கினார்: “இந்து சட்டத்தொகுப்பை செயல்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. இது தொடர்பான சட்டவரைவை அது பரிசீலித்து வருகிறது.”

“இந்து சட்டத் தொகுப்பை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்வது அவையின் விருப்பம். ஆனால் அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, அவை அதை நிராகரிக்குமானால் அது அரசையே நிராகரிப்பதாகும். அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் மிக முக்கியமான நடவடிக்கைகளுள் இதுவும் ஒன்று என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பொருத்தே அரசு நிலைப்பதும் வீழ்வதும் இருக்கிறது.”

1949 டிசம்பர் 19 அன்று மீண்டும் பிரதமர் இவ்வாறு கூறினார்: “இந்து சட்டத் தொகுப்பு முக்கியமானதல்ல என அரசு கருதுவதாக இந்த அவைக்கு சிறிதளவு எண்ணம் வருவதைக் கூட நான் விரும்பவில்லை. ஏனெனில், நாங்கள் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளில் ஆகப் பெரியதான இந்த பிரச்னை குறித்த அதன் அடிப்படை அணுகுமுறைக்காகவே அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நாம் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். நமது பயணத்தில் இது ஒரு கட்டமாகும். இதோடு, பொருளாதாரம், சமூகம் என்று இன்னும் பல கட்டங்கள் உள்ளன. நமது சமூகம் முன்னேற வேண்டுமெனில், எல்லா முனைகளிலும் இப்படியான ஓர் ஒருங்கிணைந்த முன்னேற்றம் தேவை.”

1951 செப்டம்பர் 26 அன்று பிரதமர் கூறியதாவது: “சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் எந்த அளவு முடியுமோ அந்த அளவில் இந்த சட்டத் தொகுப்பை நிறைவேற்ற அரசு கொண்டுள்ள விருப்பம் குறித்து இந்த அவைக்கு உறுதி அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நம்மைப் பொருத்த வரையில் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் வரையில், இது தள்ளிவைக்கப்பட்டதாகவே கருதுகிறோம். அந்த வாய்ப்பை இந்த நாடாளுமன்றமே அளிக்கும் என நம்புகிறேன்.”

இது இந்த சட்டவரைவைக் கைவிடுவதாகப் பிரதமர் அறிவித்த பிறகு கூறியது. பிரதமரின் இந்த அறிவிப்புகளை யார்தான் நம்பாமல் இருக்க முடியும்? பிரதமரின் வாக்குறுதிகளுக்கும் செயல்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை என்றால், அத்தவறு கண்டிப்பாக என்னுடையதல்ல. அமைச்சரவையிலிருந்து நான் வெளியேறியது, இந்நாட்டில் எவரும் அக்கறை கொள்ளக் கூடிய ஒரு செய்தியாக இல்லாதிருக்கலாம். ஆனால் எனக்கு நானே உண்மையாக இருக்க வேண்டும் எனில், நான் வெளியேறுவதன் மூலமே அது சாத்தியம். அதற்கு முன் அமைச்சரவையின் உறுப்பினராக நான் இருந்தபோது என்மீது காட்டிய அன்புக்காகவும் பாசத்திற்காகவும் எனது சகாக்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு நான் விலகவில்லை என்ற போதும், என்னை இதுநாள் வரையில் சகித்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1325)





கோழைகளான ஆண் கடவுள்களா பெண் கடவுள்களுக்கு சக்தி கொடுத்தார்கள்? – II

26 11 2008

Ambedkar வேதத்தில் வரும் பெண் கடவுள்களையும் புராணப் பெண் கடவுள்களையும் ஒப்பிடும்போது, சில சுவையான கேள்விகள் எழுகின்றன. வேத இலக்கியத்தில் அசுரர்களுக்கு எதிரான போர்கள் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன. ஆனால், அசுரர்களுக்கு எதிரான இந்தப் போர்களில் எல்லாம் ஆண் கடவுள்களே போர் புரிகிறார்கள். வேதங்களில் பெண் கடவுள்கள் போரில் பங்கேற்கவில்லை. வேத காலத்தில் அசுரர்களுடன் ஆண் கடவுள்கள் மட்டுமே போரிட்டதற்கு பதிலாக, புராண காலத்தில் பெண் கடவுள்கள்தான் போரிடுகிறார்கள்.

வேதகாலக் கடவுள்கள் செய்ததைப் புராணப் பெண் கடவுள்கள் செய்ய வேண்டியிருந்தது. ஏன்? புராண காலங்களில் கடவுள்கள் இல்லாமல் போனார்கள் என்பது காரணமாக இருக்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்கள் இருந்தார்கள். அசுரர்களுடன் போரிடுவதற்கு இவர்கள் இருந்தபோது, ஏன் பெண் கடவுள்கள் போரிட வைக்கப்பட்டார்கள்?

புராணங்களில் பெண் கடவுள்களில் பல பெயர்கள் காணப்பட்ட போதிலும் உண்மையில் அய்ந்து பெண் கடவுள்கள் தான் இருக்கிறார்கள். சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, துர்க்கை, காளி. சரஸ்வதியும், லட்சுமியும் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் மனைவிகள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் புராணக் கடவுள்களாக ஏற்கப்பட்டவர்கள். பார்வதி, துர்க்கை, காளி ஆகியோர் சிவனின் மனைவிகள். ஆனால் சரஸ்வதியும் லட்சுமியும் எந்த அசுரர்களையும் கொல்லவில்லை. வீரச் செயல்கள் எதையும் செய்யவில்லை. இது ஏன் என்பது தான் கேள்வி.

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஆற்றல் உண்டு. சக்தி கொள்கையின்படி இது அவர்களுடைய மனைவிகளிடம் உறைந்திருக்க வேண்டும். அப்படியானால் சரஸ்வதியும் லட்சுமியும் அசுரர்களுடன் போர் செய்யாதது ஏன்? சிவனின் மனைவிகள் மட்டுமே இதைச் செய்கிறார்கள். இங்கேயும் பார்வதியின் பங்கு துர்க்கையின் பங்கிலிருந்து வேறுபட்டுள்ளது. பார்வதி ஒரு சாதாரணப் பெண்ணாகக் காட்டப்படுகிறார். துர்க்கைக்குக் கூறப்படுவது போன்ற வீரச் செயல்கள் பார்வதிக்குக் கூறப்படவில்லை.

துர்க்கையை போலவே பார்வதியும் சிவனின் சக்தியாவாள். அப்படியென்றால் அவளிடம் றைந்த சிவனின் சக்தி மந்தமாகவும், உறங்குவதாகவும், இன்னும் சொல்லப்போனால் இல்லை என்று கூறும் அளவுக்குச் செயலற்றதாகவும் இருந்தது ஏன்?

தர்க்கரீதியாகப் பார்க்கும் போது, ஒவ்வொரு கடவுளுக்கும் சக்தி இருக்கிறது என்றால், வேதக் கடவுள்களுக்கும் அது இருந்திருக்க வேண்டும். அப்படியானால் வேதக் கடவுள்களின் மனைவிகளுக்கு இந்தக் கொள்கை ஏன் கூறப்படவில்லை? வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, புராணக் கடவுள்களிடம் சக்தி இருந்தது என்று கூறுவதற்கு நியாயம் எதுவும் இல்லை. மேலும், பார்ப்பனர்கள் துர்க்கையை மட்டுமே அசுரர்களை அழிக்கவல்ல வீராங்கனையாக ஆக்கியதன் மூலம் – தங்களுடைய கடவுள்களையெல்லாம் பரிதாபமான கோழைகளாக ஆக்கி விட்டதை உணரவில்லை.

கடவுள்கள் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெல்ல முடியாது என்றும், தங்களைக் காப்பாற்றுவதற்குத் தங்கள் மனைவிகளின் உதவியைக் கெஞ்சிக் கேட்க வேண்டியிருந்தது என்றும் தோன்றுகிறது. அசுரர்களை எதிர்ப்பதில் புராணக் கடவுள்கள் எவ்வளவு திறனற்றவர்களாகப் பார்ப்பனர்களால் காட்டப்படுகிறார்கள் என்பதற்கு, மார்க்கண்டேய புராணத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டே போதுமானது:

“அசுரர்களின் அரசனான மகிஷன் ஒரு முறை தேவர்களைப் போரில் தோற்கடித்து, அவர்களை வறுமைக்குள்ளாக்கினான். தேவர்கள் பிச்சைக்காரர்களாகி பூமியில் திரிந்து கொண்டிருந்தனர். இந்திரன் இவர்களை முதலில் பிரம்மாவிடமும் பின்பு சிவனிடமும் கூட்டிச் சென்றான். இவர்கள் இருவரும் தேவர்களுக்கு உதவ முடியாததால் விஷ்ணுவிடம் சென்றார்கள். விஷ்ணு தேவர்களின் பரிதாப நிலையைக் கண்டு உள்ளம் வருந்தியதால், அவரது முகத்திலிருந்து ஒளி வெள்ளம் புறப்பட்டது. அவற்றிலிருந்து ‘மகாமாயை’ (துர்க்கையின் மற்றொரு பெயர்) என்ற பெண் உருவம் தோன்றியது.

மற்ற கடவுள்களின் முகங்களிலிருந்தும் ஒளி வெள்ளங்கள் புறப்பட்டு, மகாமாயையினுள் புகுந்தன. இதனால் மகாமாயை ஒரே ஒளிமயமாக நெருப்பு மலையைப் போல ஆகிவிட்டார். பின்னர் கடவுள்கள் தங்களுடைய ஆயுதங்களை அந்தப் பயங்கரமான உருவத்திடம் கொடுத்து விட்டார்கள். அவள் அச்சமூட்டும்படியான பெரும் கூச்சல் எழுப்பிக்கொண்டு, காற்றில் மேலே பாய்ந்து அசுரனைக் கொன்று தேவர்களின் துன்பத்தைத் தீர்த்தாள்.”

இப்படிக் கோழைகளான கடவுள்களிடம் என்ன வல்லமை இருக்க முடியும்? அவர்களிடம் வல்லமை இல்லையென்றால், அவர்கள் எப்படி அதைத் தங்கள் மனைவிகளுக்குக் கொடுக்கமுடியும்? பெண் கடவுள்களிடம் சக்தி இருப்பதால் அவர்களை வழிபட வேண்டும் என்று கூறுவது, ஒரு புதிர் மட்டுமல்ல; பொருந்தாத பொருளற்ற கூற்றுமாகும். சக்திக் கொள்கை ஏன் உருவாக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் தேவைப்படுகிறது. சந்தையில் ஒரு புதிய பொருளை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக, பார்ப்பனர்கள் பெண் கடவுள்களை வழிபடும் முறையைத் தொடங்கி வைத்து, தங்கள் கடவுள்களைத் தாழ்ந்த நிலைக்கு இறக்கி விட்டார்களா?





அம்பேத்கர் பார்வையில் காந்தியம்

2 10 2008

” ‘காந்தியம் என்று ஒன்றில்லை’ எனக் காந்திஜி அறிவித்திருந்தபோதும், அதே தலைப்பில் அவருடைய சம்மதத்துடனேயே ஏராளமான புத்தகங்கள் வெளியாயின; இந்திய வானில் புதிதாக உதித்த கோட்பாடே காந்தியம் என்பதற்கான ஆதாரம் இது” என்ற குறிப்புரையுடன்தான் காந்தியம் பற்றிய தன்னுடைய விவாதத்தை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தொடங்குகிறார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அடித்தள மக்கள் பிரிவைக் காந்தியம் எப்படிப் பாதிக்கிறது என்பதையே அம்பேத்கர் முதன்மையாக ஆராய்கிறார். தீண்டத்தகாதவரைப் பொறுத்த வரை, பொதுவாகக் கருதப்படுவது போலக் காந்தியம் வரமல்ல; அது ஒரு பொறி என்னும் முடிவுக்கு வந்து சேருகிறார். அதற்கான நியாயங்களையும் அவர் ஒவ்வொன்றாக முன் வைக்கிறார்.

சமூகத்தின் புறம்போக்கு வெளியில் வீசியெறியப்பட்ட தீண்டத் தகாதவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் காந்தி எவ்வாறு தோல்வியடைந்தார் என்பதை விளங்கிக்கொள்ள காந்தியத்தின் அடிப்படை உணர்வுகளை ஆராய வேண்டும். தன்னிறைவு பெற்ற கிராமங்களை நோக்கித் திரும்பச் செல்வதே காந்தியத்தின் அடையாளம் என்னும் பார்வை எளிமைப்படுத்தப்பட்ட ஒன்று. “என்னுடைய அபிப்பிராயத்தில் காந்தியம் அவ்வளவு எளிமையானதோ களங்கமற்றதோ அல்ல; பிராந்தியவாதத்தைவிடவும் வலுவானது அதன் உள்ளடக்கம். பிராந்தியவாதம் அதன் ஒரு அம்சம் மட்டுமே. அதற்கு ஒரு சமூகப் பார்வையும் பொருளாதாரப் பார்வையும் உண்டு. அவை இரண்டையும் விட்டுவிட்டு காந்தியத்தைப் புரிந்துகொள்வது அதைப் பற்றிப் பிழையான சித்திரத்தை முன்வைப்பதாகும்” என்று எழுதுகிறார் அம்பேத்கர்.

இந்து மதத்தில் நிலவும் சாதிய மரபைப் பற்றிய காந்தியின் கண்ணோட்டமே, சமூகப் பிரச்சினைகளில் அவருடைய நிலைபாட்டை வெளிப்படுத்தவும் உதவுகிறது. நவஜீவன் என்னும் குஜராத்தி மொழி வெளியீட்டில் காந்தி எழுதிய நீண்ட கட்டுரை சாதியக் கட்டுமானங்களில் அவருக்குள்ள வலுவான நம்பிக்கையைப் பகிரங்கப்படுத்துகிறது. சுயராஜ்ஜியத்தின் விதைகள் சாதி அடிப்படையில் உருவாக வேண்டும் எனக் காந்தி அதில் குறிப்பிடுகிறார். சாதிக் கட்டுமானத்தை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் கல்வியையும் அரசியல் பாதுகாப்பையும் அடைய முடியும் என்ற கண்ணோட்டத்தையும் காந்தி முன்வைக்கிறார். சாதியை ஒரு கட்டுக்கோப்பாகக் காணும் அவர் யாரும் சாதியின் எல்லைகளை மீறக் கூடாது என்றும் விரும்புகிறார். ‘சமூகத்துக்கு இயற்கை வழங்கிய முறையே சாதியமைப்பு’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சாதி அமைப்புப் பற்றிக் காந்தி பல சந்தர்ப்பங்களில் நடத்திய அறிவிப்புகளை வரிசைப்படுத்தி அம்பேத்கர் விளக்குவது இந்தியாவில் நிலவும் சாதியமைப்பிலிருந்து காந்தியம் யாரையும் விடுதலை செய்யாது என்பதைத்தான்.

அம்பேத்கரின் விமர்சனத்துக்கு இலக்காகும் இரண்டாம் பொருள் காந்தியத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம். மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றங்களுடனும் எந்திர நாகரிகத்துடனும் காந்திக்கு இருந்த எதிர்ப்புணர்வு பிரசித்தமானது. நவீன எந்திர நாகரிகம் மனிதனை உழைப்பிலிருந்து விடுவிக்கிறது. அதன் மூலம் அவன் சிந்திக்கவும் செயல்படவும் வாய்ப்புகளை அளிக்கிறது என்பது அம்பேத்கரின் கண்ணோட்டம். தொழில் நாகரிகத்தை எதிர்ப்பதன் மூலம் மக்கள் சுதந்திரம் பெறும் வாய்ப்பைக் காந்தி மறுக்கிறார் என்பது அம்பேத்கரின் மதிப்பீடு.

தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்கும் இடையில் உருவாகும் பிரச்சினைகளில் காந்தி முற்றாக முதலாளிகளின் தரப்பிலேயே இருக்கிறார் என்பது காந்தியத்துக்கு எதிராக அம்பேத்கர் முன்வைக்கும் மூன்றாம் விமர்சனம். பம்பாயில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் வன்முறையின் மொழியில் பேசுவது உசிதமான வழியல்ல என்றே காந்தி குறிப்பிட்டார். “ஐரோப்பாவைப் பாருங்கள், அங்குள்ள யாரும் திருப்தியாக இல்லை. தொழிலாளிகள் முதலாளிகளை நம்புவதில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகள் மீது நம்பிக்கையில்லை” எனச் சுட்டிக்காட்டிவிட்டு “தொழிலாளர்கள் தொழிலாளர்களாக இல்லாமல் போனால் முதலாளிகள் புத்தியையும் தந்திரத்தையும் பயன்படுத்துவார்கள்” என்றும் குறிப்பிடுகிறார். இது தொடர்பான காந்தியின் சொற்பொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர் இவ்வாறு எழுதுகிறார்:

“சொத்துடைமை வர்க்கத்துக்குக் கீறல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே மிஸ்டர். காந்தி விரும்புகிறார். அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவம் என்னும் உணர்வு அவருக்கில்லை. பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லத் தான் விரும்பவில்லை என்று பணக்கார வர்க்கத்தை முன்னிறுத்தி அண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளார். உடைமையாளருக்கும் தொழிலாளருக்கும், பணக்காரர்களுக்கும் தரித்திரர்களுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் குடியானவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகளுக்குக் காந்தியின் தீர்வு எளிமையானது. சொத்துகளைத் துறக்க வேண்டாம். தாங்கள் சொத்துகளின் அறங்காவலர்கள் மட்டுமே என்று அறிவித்தால் போதும். அதுவுங்கூடத் தங்கள் விருப்பப்படி நிறைவேற்ற வேண்டிய ஓர் ஆன்மீகக் கடமை”

சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை ரூசோவும் ரச்கினும் டால்ஸ்டாயும் சொன்னதைத்தான் காந்தி திரும்பச் சொல்கிறார் என்பது அம்பேத்கரின் கருத்து. காந்தியத்தை உருவாக்கியது பழமையான கருத்துகள்தாம். மீண்டும் விலங்கு நிலை வாழ்க்கைக்குக் கொண்டு செல்பவை அவை. ‘எளிமை’ மட்டுமே அவற்றின் சிறப்பியல்பு. அது போன்ற கருத்துகளை எல்லாக் காலத்திலும் சில சாமியார்கள் சொல்லிக்கொண்டு திரிவார்கள் என்றும் அம்பேத்கர் கேலி செய்கிறார். முன்னேற்றத்துக்கான பாதையைத் தேடும் நடைமுறை உணர்வுள்ள சமூகம் அவற்றை எதிர்த்துப் புறக்கணிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். “எதிர்பார்க்க எதுவும் இல்லாத மாயையே காந்தியப் பொருளாதாரம்” என்று முடிவும் செய்கிறார்.

சாதாரணனுக்குக் காந்தியம் எந்தவித நம்பிக்கையையும் வழங்குவதில்லை என்று உறுதியாகச் சொல்லும் அம்பேத்கர் அதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டுவது, கலாச்சாரத்தை உயர் வருணத்தவருக்கு மட்டுமே உரியது என்று அது நிலைப்படுத்துகிறது என்பதைத்தான். ஓய்வும் கலாச்சாரமும் எல்லாக் குடி மக்களுக்கும் உரியது என்னும் ஜனநாயக விழுமியத்தைக் காந்தி ஏற்பதில்லை. உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். விலங்குக்கொப்பான வாழ் நிலையையே அது சாதாரண மனிதனுக்கு அளிக்கிறது. பெரும்பான்மை மக்களைப் பொருத்தவரை ‘இயற்கையை நோக்கித் திரும்புதல் என்னும் காந்திய அறைகூவல் அவர்களை வறுமையையும் அறியாமையையும் நோக்கியே கொண்டு செல்லும். வருண அடிப்படையில் வேர்கொண்ட காந்தியம் சாதாரண மனிதர்களிடையே சிக்கலான அடிமை உணர்வையே வளர்க்கும். அதிகாரமும் செல்வமும் மமதையும் போலிப் பெருமைகளும் ஒரு புறம் குவியும்போது, பாதுகாப்பின்மையும் பட்டினியும் வீழ்ச்சியும் இழிவுகளும் மற்றொரு பக்கம் பெருகுகின்றன. இப்படிப்பட்ட ஒரு அமைப்பையே காந்தியம் நம்புகிறது.

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகக் காந்தி முன்வைக்கும் தர்மகர்த்தா வாழ்க்கைமுறை நடப்பு எதார்த்தங்களுடன் தொடர்பில்லாத அபத்தம் என்பது அம்பேத்கருடைய பார்வை. சாதியை அல்லது வருணாசிரம தருமத்தைச் சமுதாய இலட்சியமாக ஏற்கும் காந்தியம் ஜனநாயகத்துக்கு எதிரானது. வெளிநாட்டு ஆதிக்கச் சக்திகளிடம் நிபந்தனையற்றுச் சரணடைந்த வரலாற்றைக் கொண்டவர்கள் உயர் சாதி இந்துக்கள். அவர்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் உருவானதில்லை. அடிமைத்தனத்தை அவர்கள் ஆறுதலாகக் கண்டார்கள். சாதியமைப்புத்தான் இந்துச் சமூகத்தை இது போன்ற கையறுநிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. ராணுவ ஆற்றலை வளர்க்கச் சாதியமைப்பைப் பயன்படுத்தலாம் என்ற காந்தியின் வாதத்தை அம்பேத்கர் கேலி செய்கிறார். வெவ்வேறு சாதியினர் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சமபந்தி விருந்தைக் கூட்டு மலங்கழிப்பு என்று உவமித்த காந்தியின் வாதம் பைத்தியக்காரத்தனம் என்று கண்டிக்கிறார். சாதியப் பிரிவினை இயற்கையானது என்னும் வாதத்தை மிக அபாயகரமானதாகவும் அம்பேத்கர் கருதுகிறார். வரலாற்று அடிப்படையிலும் இந்த வாதம் முட்டாள்தனமானது என்று மனுதர்மத்தை மேற்கோள்காட்டி நிறுவுகிறார்.

பின்னர் காந்தி சாதியப் பிரிவினையிலிருந்து வருணங்களுக்கு மாறுகிறார். ஆனால் இரண்டும் ஏற்படுத்தும் விளைவுகளில் வித்தியாசம் இல்லை என்பது அம்பேத்கரின் தரப்பு. ‘வருண’த்திலிருந்து உருவானதுதான் ‘சாதி’. வருணாசிரம நிலைபாடுகள்மீது பவுத்தர்கள் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லச் சனாதனிகளால் முடியவில்லை. பகவத் கீதை உயர்த்திக்காட்டும் வருணாசிரம தர்மம் பிறப்பை அடிப்படையாகக்கொண்டதல்ல; ஒருவன் தன் தகப்பனின் தொழிலையே செய்ய வேண்டும் என்று கீதை உபதேசம் செய்யவுமில்லை. தனிநபரின் உள்ளார்ந்த இயல்புகள்தாம் வருணாசிரமத்தின் அடிப்படை. கீதையின் இந்தக் கருத்தை அடையாளம் காண முடியாதபடி காந்தி தலைகீழாக மாற்றிவிட்டார் என்று அம்பேத்கர் குற்றம் சாட்டுகிறார். ‘வருணத்தை’ மரபுவழிப்பட்டதாகக் காந்தி மாற்றுகிறார். அதனால்தான் காந்தியின் வருணத்துக்கும் சாதிக்கும் இடைவெளியில்லாமல் போகிறது. தன்னுடைய சாதியக் கோட்பாட்டைவிட்டு வெளியேறக் காந்தியால் முடியவில்லை என்று அம்பேத்கர் முடிவு செய்கிறார்.

ஜனநாயகத்துக்கு ஆதரவாகவோ முதலாளித்துவத்துக்கு எதிராகவோ காந்தி ஒருபோதும் பேசியதில்லை. வெளிநாட்டவரிடம் சுதந்திரத்துக்காக வாதாடும்போதே சமுதாயத் தாழ்வுகள் பிறப்பிலேயே உள்ளவை எனச் சொன்னது காந்தியத்தின் முரண்பாடு. ‘சுயராஜ்ஜிய’ முழக்கத்துக்கு உயர் சாதி இந்துக்களின் ஆதரவைப் பெறுவதுதான் காந்தியின் நோக்கமாக இருந்திருக்குமோ? ஆம் என்பதுதான் பதில் என்றால் காந்தியம் உண்மையானது என்று எப்படிச் சொல்ல முடியும் என்பது அம்பேத்கரின் கேள்வி.

இருப்பவரை இருப்பவராகவும் இல்லாதவரை இல்லாதவராகவும் நிலைநிறுத்துவதுதான் காந்தியத் தத்துவம் என்பது அம்பேத்கரின் கருத்து. இல்லாதவன் அவனுடைய உரிமையைக் கேட்டுப் பெறுவதைக் காந்தியம் தடைசெய்கிறது. ‘சொத்துக்கு ஆசைப்படாதே’ என்பதுதான் சூத்திரனுக்குக் காந்தி வழங்கும் உபதேசம். தோட்டிகள் தொடர்ந்து அதே தொழிலைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே காந்தி அந்தத் தொழிலுக்கு மகத்துவம் கற்பித்தார் என்று அம்பேத்கர் வாதாடுகிறார்.

தீண்டத்தகாதவர்கள் பற்றிக் காந்தி சொன்ன எதுவும் தீண்டாமையை ஒழிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்னும் முடிவுக்கே காந்திய விமர்சனத்தின் இறுதியில் அம்பேத்கர் வந்து சேருகிறார். தீண்டத்தகாதவர்களை ‘ஹரிஜனங்கள்’ என்று அழைப்பதன் மூலம் காந்தி ஒரே கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்துகிறார். தீண்டத்தகாதவர்களைச் சூத்திரர் என்று குறிப்பிடாததன் மூலம் வருணாசிரம கட்டமைப்புக்குள் அவர்களை நுழைய முடியாமல் தடைசெய்தாகிவிட்டது. அவர்களுக்குப் புதிய பெயர் சூட்டியதன் மூலம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தீண்டத்தகாதவர்களுக்குக் கல்வி அவசியம் என்று காந்தி ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்தக் கல்வியைப் பயன்படுத்தும் வாய்ப்புகளை அவர் மறுக்கிறார் என்று கண்டடைகிறார் அம்பேத்கர். சட்டமோ மருத்துவமோ பொறியியலோ படித்தாலும் தீண்டத்தகாதவர்கள் தமது குலத்தொழிலைச் செய்ய வேண்டும். முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்கள் ஒருபோதும் மாற்றப்படக் கூடாது என்பதே காந்தியின் கொள்கை.

சாதி இந்துத்துவத்தின் விழுமியங்களையே காந்தியம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கர்மா கோட்பாடு, பசு வழிபாடு, அவதாரங்கள் பற்றிய நம்பிக்கை, விக்கிரக வழிபாடு இவையெல்லாம் காந்தியத்தின் தவிர்க்க முடியாத அம்சங்கள். அதனால் காந்தியம் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்கான வழியல்ல என்னும் கண்ணோட்டத்தை அடைகிறார் அம்பேத்கர்.

*********************************************************************

அம்பேத்கர் மறைவு செய்தி கேட்ட பெரியார்!
இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும்,ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்!!

உலகத்தரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை,வெகு சாதாரணமாக மதித்ததோடு,அவருடைய பல கருத்துக்களை சின்னாபின்னமாகும்படி மக்களிடம் விளக்கம் மேதாவியாக இருந்தார்.இந்துமதம் என்பதான ஆரிய-ஆத்திக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும்,ஆபாசமாகவும்.அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாக பேசியும் எழுதியும் வந்தார்.உதாராணம் சொல்ல வேண்டும்மானால்,காந்தியாரையே ஒரு பத்தாம் பசிலி பிற்போக்கு வாதி என்றும் அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையே முட்டாளின் உளறல்கள் என்றும் சொன்னதோடு,காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும் இராமணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் இராமாயணத்தை சுட்டு எரித்தும்ச் சாம்பலாக்கினார்!

இந்துமதம் உள்ளவரையில் தீண்டாமையும் சாதிப் பிரிவும் அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார்! மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தழுவும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார்,இப்படியாக அநேக அரிய காரியங்களை செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவாதியும்,ஆராய்ச்சி நிருபுணரும்,சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேதகர் முடிவு எய்தியது இந்தியாவுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ,பகுத்தறிவு வளச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.

அம்பேத்கரின் மறைவு எனும் செய்தி திடிரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து,அவரது மரணத்துக்குப் பின்னர் சில இரகசியங்கள் இருக்கலாம்மென்று கருதுகிறேன்.அதாவது காந்தியார் மரணத்திற்க்கு உண்டான காரணங்களும் அதற்க்கு ஆதாரமான பல சங்கதிகளும் ,டாக்டர் அம்பேதகர் மரணத்திற்க்கும் இருக்கக் கூடும் என்பதேஆகும்.

பெரியார் இப்படி குறிப்பிட்டது விடுதலை 8-12-1956 யில்





நான் எதிர்த்ததால்தான் என் பெயர் சேர்க்கப்பட்டது -II

10 09 2008

Ambedkar எனது காலத்தில் ஓர் அமைச்சரிடமிருந்து மற்றொரு அமைச்சருக்கு துறைகள் மாற்றம் செய்யப்பட்டு வந்தன. நான் எப்போதுமே ஒதுக்கப்பட்டே வந்தேன். பல அமைச்சர்களிடம் இரண்டு அல்லது மூன்று துறைகள் கொடுக்கப்பட்டன. என்னைப் போன்றே மற்றவர்களும் கடும் பணிகளை செய்யக் காத்திருந்தனர். யாரேனும் ஓர் அமைச்சர் சில நாட்களுக்கு வெளிநாடு சென்றிருக்கும்போது, அவரது துறை தற்காலிகமாகக் கூட எனக்குத் தரப்படுவதில்லை, அரசாங்கப் பணிகளை அமைச்சர்களிடம் பகிர்ந்தளிப்பதில் என்ன அடிப்படைக் கோட்பாட்டை பிரதமர் பின்பற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்வதே எனக்கு கடினமாக இருந்தது. அது திறமையா? நம்பிக்கையா? நட்பு முறையா? செல்வாக்கா? வெளியுறவுத்துறைக் குழு அல்லது பாதுகாப்புத் துறைக் குழு போன்ற அமைச்சரவையின் முக்கியமான குழுக்களில் ஓர் உறுப்பினராகக்கூட நான் நியமிக்கப்படவில்லை.

பொருளாதார விவகாரக் குழு அமைக்கப்பட்ட போது பொருளாதாரம் மற்றும் நிதித் துறைகளில் நான் குறிப்பாகப் பெரிதும் தேர்ச்சிப் பெற்றவன் என்ற கண்ணோட்டத்தில், இக்குழுவில் எனக்குப் பணி தரப்பட்டு அமர்த்தப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் பின்னுக்குத் தள்ளப்பட்டேன். பிரதமர் இங்கிலாந்திற்குச் சென்றிருந்தபோதுதான் நான் அப்பணியில் அமைச்சரவையில் அமர்த்தப்பட்டேன். ஆனால் அவர் திரும்பி வந்தபோது, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் அவர் என்னைத் தவிர்த்துவிட்டார். இதற்குப் பின்னர் நடைபெற்ற புனரமைப்பில் எனது பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நான் எதிர்த்ததால்தான் கிடைத்தது.

இது தொடர்பாக நான் ஒருபோதும் பிரதமரிடம் புகார் எதையும் கொடுக்கவில்லை என்பதை அவரே ஒப்புக் கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். அமைச்சரவைக்குள் நடைபெறும் அரசியல் அதிகாரப் போட்டிகளிலோ, காலி இடங்கள் ஏற்படும்போது அத்துறைகளை அபகரித்துக் கொள்ளும் விளையாட்டிலோ நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. எனினும் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இந்த விஷயத்தில் எனக்கு தவறு இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உணராதிருப்பது, மனிதத் தன்மையற்றதாக இருந்திருக்கும்.

அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொள்ளச் செய்த மற்றொரு விஷயத்தை இப்போது குறிப்பிட விரும்புகிறேன். அது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பானதாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசியல் சாசனம் முன்வைக்கவில்லை என்பது கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படவுள்ள ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்வாக அரசாங்க சாசனத்தை நாம் அங்கீகரித்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், அரசாங்கமோ ஓர் ஆணையம் அமைப்பது குறித்து சிந்தித்துப் பார்க்கக்கூட இல்லை. நான் பதவியிலிருந்து வெளியேறிய 1946ஆம் ஆண்டு எனக்கும், பட்டியல் சாதியினரிலே தலைமையை ஏற்றிருந்த உறுப்பினர்களுக்கும் மிகப் பெரிய கவலையை அளித்த ஓர் ஆண்டாக அது இருந்தது.

பட்டியல் சாதியினருக்கான அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்புகள் குறித்த விஷயத்தில், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளிலிருந்து பிரிட்டிஷார் பின்வாங்கி விட்டனர். மேலும் தங்களுக்காக அரசியல் நிர்ணய சபை என்ன செய்யும் என்பது பற்றி பட்டியல் சாதியினர் எதையும் அறிந்திருக்கவில்லை. கவலையளித்த இக்காலகட்டத்தில் அய்க்கிய நாடுகள் அவைக்கு வழங்குவதற்காக, பட்டியல் சாதியினரின் நிலை குறித்து ஓர் அறிக்கையை நான் தயாரித்திருந்தேன். ஆனால் அதை நான் அய்.நா. அவையில் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் நிர்ணய சபையும் வருங்கால நாடாளுமன்றமும் இந்த விஷயம் குறித்து ஒரு முடிவுக்கு வரும் வரை காத்திருப்பது உகந்தது என்று நான் உணர்ந்தேன்.

பட்டியல் சாதியினரின் நிலையைப் பாதுகாப்பதற்காக அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டிருந்த வழிவகை ஏற்பாடுகள் எனக்கு நிறைவளிக்கவில்லை. இருப்பினும் அரசாங்கம் அவற்றை பயனுறுதியுடையதாக்க ஓரளவு முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையில் அவற்றை நான் ஏற்றுக் கொண்டேன். பட்டியல் சாதியின் நிலை இன்றைக்கு எப்படி இருக்கிறது? எனக்குத் தெரிந்தவரை அது பழைய நிலையிலேயே இருக்கிறது. அதே பழைய கொடுங்கோன்மை, அதே பழைய கொடுமை, பாரபட்சம் காட்டும் அதே பழைய நிலை ஆகியவை முன்பு இருந்தது போலவே, இன்றளவும் இருந்து வருகின்றன. டில்லி மற்றும் பக்கத்திலுள்ள இடங்களைச் சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் என்னிடம் வந்து, சாதி இந்துக்கள் தங்களுக்கு இழைத்து வரும் கொடூரங்கள், இது தொடர்பான தங்களது புகார்களைப் பதிவு செய்ய மறுத்து வரும் காவல் துறையினரின் விபரீத போக்கு குறித்தும் உள்ளம் உருக்கும் சோகக் கதைகளைக் கூறினர். இத்தகைய நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை என்னால் கூற முடியும்.

– தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1318







வெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது – III

10 09 2008

Ambedkar இந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினர் போல் கடும் வேதனைக்கு ஆட்படும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்று நான் ஆச்சரியத்துடன் நோக்கினேன். வேறு எவரையும் நான் காண முடியவில்லை. இருந்தும் கூட பட்டியல் சாதியினருக்கு உதவிகள் எதுவும் ஏன் வழங்கப்படவில்லை? முஸ்லிம்களைப் பாதுகாப்பது குறித்து அரசு காட்டிவரும் அக்கறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரதமரின் முழு நேரமும் கவனமும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தில் நான் யாருக்கும், பிரதமருக்கும் கூடப் பின்தங்கியவனில்லை.

ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில், பாதுகாப்பு தேவைப்படும் ஒரே பிரிவு மக்கள் முஸ்லிம்கள் மட்டும் தானா? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இந்தியக் கிறித்துவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா? இந்த சமூகங்களைக் காக்க பிரதமர் எத்தகைய அக்கறையைக் காட்டினார்? இதுவரை நான் எதையும் காணவில்லை. உண்மையில் முஸ்லிம்களைவிடக் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மக்கள் இவர்களேயாவர்.

அரசாங்கத்தினால் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கப்படுவது குறித்து எனது கடுஞ்சினத்தை, உள்ளக் கொதிப்பை என் மனதிற்குள்ளேயே அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. பட்டியல் சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறினேன். அவர்களுக்கு 12.5 சதவிகிதப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த சட்டத்தினால், பட்டியல் சாதியினர் பலனடையவில்லை என்ற எனது குற்றச்சாட்டு உண்மையா என மாண்புமிகு உள்துறை அமைச்சர் கேட்டார். அக்கேள்விக்கான பதிலில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் எனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளில் அண்மையில் பட்டியல் சாதியினரின் பிரதிநிதிகள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று, இந்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதற்கு பல துறைகள் ‘இல்லை’ என்ற பதிலை அனுப்பியது என்று என்னிடம் கூறப்பட்டது.

எனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமேயானால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் கொடுத்த பதில் குறித்து நான் எந்தவிதக் கருத்தையும் கூறத் தேவையில்லை. எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். என் மனதில் வேறு எந்த உணர்வுகளும் இல்லை என்பதல்ல; எனது சொந்த நலன்களை மட்டும் நான் கருத்தில் கொண்டிருந்திருப்பேனேயானால், நான் விரும்பியதைப் பெற்றிருப்பேன்; காங்கிரசில் நான் சேர்ந்திருந்தால், அந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் கூறியதுபோல, பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எந்த நோக்கத்தை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதில் குறுகிய மனச் சிந்தனையுடன் இருப்பது நல்லது என்ற முதுமொழியை நான் பின்பற்றியிருக்கிறேன். ஆகவே, பட்டியல் சாதி மக்களின் லட்சியம் எவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காணும்போது, என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

எனது உணர்வைத் தூண்டிய மூன்றாவது விஷயம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்ல; உண்மையில் பெரும் துன்பத்தையும் கவலையையும் கூட அது ஏற்படுத்தியது. நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் அத்துடன் இந்தியாவின் பால் பிற நாடுகள் கொண்டிருக்கும் அணுகுமுறையையும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், நம்மால் அவர்கள் கொண்டுள்ள போக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணராதிருக்க முடியாது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு சுதந்திர நாடாக நாம் வாழ்வைத் தொடங்கிய போது, எந்நாடும் நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. உலகின் ஒவ்வொரு நாடும் நமது நண்பனாகத் தான் இருந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னர் இன்றோ நமது நண்பர்கள் அனைவரும் நம்மை கைவிட்டுவிட்டனர். நமக்கென நண்பர்கள் யாரும் இல்லை. நாமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டோம்; தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருக்கிறோம். அய்க்கிய நாடுகள் அவையில் நமது தீர்மானங்களை ஆதரிக்க எவரும் இல்லை.

நமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் போது பிஸ்மார்க்கும் பெர்னார்ட் ஷாவும் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். “அரசியல் என்பது லட்சியத்தை அடைவதற்கான பந்தய ஆட்டமல்ல; மாறாக அரசியல் என்பது சாத்தியக் கூறுகளை எய்தும் பந்தய ஆட்டமாகும்” என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். “நல்ல குறிக்கோள்கள் சிறந்தவைதான். ஆனால் அவை மிகவும் நல்லவையாக இருப்பது, பல நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது’ என்று அண்மையில் பெர்னார்ட் ஷா கூறினார். உலகின் இரு பெரும் மேதைகள் கூறிய இந்த விவேகமிக்க கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவையாக நமதுவெளியுறவுக் கொள்கை உள்ளது.

– தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1320





வட்டமேசை மாநாட்டில்அம்பேத்கர்

6 09 2008

‘ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை.
சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு!

– அம்பேத்கர்

முதலாம் வட்ட மேசை மாநாடு முடிவுக்கு வந்தபோது, இந்தியாவின் தேசியத் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்திருந்தார் அம்பேத்கர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மண்ணிலேயே, அவர்களது ஆட்சிமுறையின் கோளாறுகளைக் கடுமையாகச் சாடினார். ”இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாகவும், கிட்டத்தட்ட பிரான்ஸ் நாட்டு மக்கள்தொகைக்கு ஈடாகவும் இருக்கக்கூடிய பெருவாரியான தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக இங்கு பேசுகிறேன். உங்களது ஆட்சி எம் மக்களுக்கு அளித்துவந்த வேதனைகள் போதும். காலங்காலமாக எம்மக்கள் மதத்தின் பேரால் அனுபவித்துவரும் துயரங்களிலிருந்து மீட்காமல், உங்கள் அரசு மேலும் அவர்களை இழிவுபடுத்தி வருவதை இனியும் எங்க ளால் சகித்துக்கொள்ள முடியாது. ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு அந்த நாட்டின் ராணுவப் படையில் சேர உரிமை மறுக்கப்படுமானால், அப்படிப்பட்ட ஆட்சியே எங்களுக் குத் தேவை இல்லை. இனி இந்தியா வில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காக, மக்களே ஆள்கிற புதிய ஆட்சிமுறை வேண்டும். அந்த ஜன நாயக ஆட்சியில் எம் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போது வாழ்கிற அடிமை நிலையிலிருந்து விடுபட்டு, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் ஏனைய உயர் சாதியின ரைப் போல பூரண விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும்!” என உரத்துக் கூறினார். அம்பேத்கரின் துணிச்சலானப் பேச்சு உடன் வந்த சிற்றரசர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்த, ஓர் அரசர் அழுதேவிட்டார். அவர், அமெரிக்கா

சென்று படிக்க அம்பேத் கருக்குப் பண உதவி செய்த பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட். நம் கையால் மண்ணில் ஊன்றிய விதையன்று சட்டென நாமறியாமல் செழித்து வளர்ந்து, கனிகளுடன் பூத்துக் குலுங்குவதைத் தற்செயலாகப் பார்க்கநேரிடுகிற போது எழுகிற பூரிப்பு அது.

மாநாட்டுக்கு வந்த இதர சிற்றரசர்கள் முன்னிலையில் அன்று இரவு அம்பேத்கருக்கு விருந்து கொடுத்து கௌரவப்படுத்திக் கட்டித்தழுவினார் மன்னர். அன்று முதல் இந்தியாவிலிருந்து வந்த அனைத்துப் பிரதிநிதிகளும் அம்பேத்கரை சற்று மரியாதையுடன் பார்க்கத் துவங்கினர். வட்ட மேசை மாநாட்டில்அம்பேத் கர் ஆற்றிய உரை குறித்து லண்டனிலிருந்து வெளியான ஆங்கில நாளேடுகள் புகழ்ந்தன. ‘வயது வந்தோருக்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும்’ என்பன போன்ற அம்பேத்கரின் அதி முக்கியமான கோரிக்கைகள் குறித்து வியந்து எழுதின. ‘அம்பேத்கரின் உரையே மாநாட்டின் சிறப்பு!’ என இண்டியன் மெயில் நாளேடு எழுத, ஸ்பெக்டேட்டர் நாளேடு அதற்கும் ஒரு படி மேலாக, ‘அம்பேத்கர், இந்திய தேசியத் தலைவர்களில் தவிர்க்க முடியாத நபர்!’ எனப் புகழ் மாலை சூட்டியது.

பிப்ரவரி 27, 1931-ல் பம்பாய் பல்லார்டு துறைமுகத் தில் பெரும் ஜனத்திரளின் முன்னிலையில் வெற்றிப் புன்னகையுடன் கை அசைத்தபடியே கப்பலில் வந்து இறங்கினார் அம்பேத்கர்.

முதலாம் வட்ட மேசை மாநாட்டைத் தொடர்ந்து, அடுத்த வருடமே ஆங்கில அரசு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டுக்கான அழைப்பை வெளியிட்டது. சென்ற மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் சார்பாக, மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்த காங்கிரஸ் கட்சி இந்த முறை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றது.
காரணம், இடையில் ஏற்பட்டு இருந்த காந்தி – இர்வின் ஒப்பந்தம் என்றாலும், மூல காரணம்வேறொன் றாக இருந்தது. இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்பைத் தீர்மானிக்கும் வட்ட மேசை மாநாட்டில் எங்கே தங்களது பங்களிப்பு இல்லாது போய்விடுமோ எனும் காங்கிரஸ் கட்சியின் அச்சமும், முதல் மாநாட்டுக்குப் பிறகு ஏற்பட்ட அம்பேத்கரின் பிரமாண்டமான அரசியல் வளர்ச்சியும்தான்.

காங்கிரஸ் கட்சி ஏன் அம்பேத்கரின் வளர்ச்சியைக் கண்டு பயப்படவேண்டும். அதற்கு சில காரணங்கள் இருந்தன. காங்கிரஸின் நோக்கம், தேச விடுதலை மட்டும்தான். ஆனால், அம்பேத்கருக்கோ தேச விடுதலையோடு சேர்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்டபூர்வமான அரசியல் விடுதலையும் முக்கியக் கடமையாக இருந்தது. அதுவும் பிரிட்டிஷ் ஆட்சியிலி ருக்கும்போதே அரசியல்ரீதியாக இதற்கு முடிவெடுக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இதனால் காங்கிரஸோடு கூட்டு சேராமல் தன்னிச்சையாகவே செயல்பட்டார். இவரது இந்தச் செயல்பாடு தங்களது போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதாகவும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வலு சேர்ப்பதாகவும் காங்கிரஸ் கட்சி கருதியது. தவிர்க்க முடியாத ஒரு புகை இருதரப்புக்கும் இடையே மெள்ள எழுந்து, பின் அது அம்பேத்கரின் மீதான வன்மமாக உருவெடுக்கத் துவங்கியது. அம்பேத்கர் செல்லும் இடங்களுக்கெல்லாம் காங்கிரஸார் கறுப்புக் கொடிகளைக் காண்பித்து கோஷம் எழுப்பினர். ஆனால், அது எதையும் கண்டு கலங்காதவராக இன்னும் உறுதியுடன் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டுக்குத் தயாரானார் அம்பேத்கர்.

பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட மாநாட்டுக்கான அறிவிப்பில் முக்கியமான தலைவர்களின் பட்டியலில் சக்திவாய்ந்த இரண்டு பெயர்கள் இருந்தன. ஒன்று, அம்பேத்கர். இன்னொன்று காந்தி.

இந்த இரண்டு துருவங்களும் அதுவரை நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. இருவரும் ஒன்றாக லண்டன் மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் சலசலப்பையும் இந்திய அரசியலில் உருவாக்கியது.

1931-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6-ம் தேதி… அம்பேத்கருக்கு 106 டிகிரி காய்ச்சல். நடுங்கும் விரல்களுடன் தனக்கு வந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்தார்.

அந்தக் கடிதத்தை எழுதியிருந்தவர் காந்தி!
சரித்திரம் தொடரும்

– நன்றி: விகடன்( அஜயன் பாலா)





கோயில் நுழைவு ஊர்வலம்!

6 09 2008

‘பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!

-அம்பேத்கர்

மார்ச் 3

நாசிக் நகரமே நடுங்கியது. ஜில்லா மாஜிஸ்திரேட், போலீஸ் சூப்பிரன்டெண்டென்ட் உட்பட எண்ணற்ற அதிகாரிகளும் காவலர்களும் கோயிலின் அடைக்கப்பட்ட கதவுகளின் முன் வந்து குவிந்தனர். இத்தனை களேபரத்துக்கும் காரணம், தாழ்த்தப்பட்டோரின் கோயில் நுழைவு ஊர்வலம்!

அம்பேத்கரின் தலைமையில், வரிசைக்கு நான்கு பேராக கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் மிகவும் அமைதியான முறையில் நகரின் மையத்தில் இருந்த காலாராம் கோயிலை நோக்கி ஊர்வலமாக நடந்து வந்தனர். ஊர்வலம் கோயிலை நெருங்க நெருங்க, நிர்வாகிகளுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் குலைநடுக்கம். எங்கே பெரும் கலவரம் வெடிக்கப்போகிறதோ எனக் கால்கள் வெடவெடக்கக் காத்திருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு!

கோயிலை அடைந்ததும், ஊர்வலத்தினரைக் கோயிலின் நான்கு புறமும் மூடப்பட்டுக்கிடந்த கதவுகளின் முன் அமைதியாக உட்காரும்படி கட்டளையிட்டார் அம்பேத்கர். தலைவனின் கட்டளைக்கு எட்டாயிரம் தலைகளும் கட்டுப்பட்டன. நேரம் கடந்ததே ஒழிய, கதவுகள் திறக்கவே இல்லை. இரவானதும் கூட்டம் களைத்துப்போய் கிளம்பிவிடும், போராட்டம் பிசுபிசுத்துவிடும் என கோயில் நிர்வா கத்தினர் நினைத்தனர்.

ஆனால், இரவு கடந்து மறுநாள் விடிந்த பிறகும் குழுவினர் அப்படியே அமர்ந்திருக்க, கோயில் வாசலும் அடைபட்டுக்கிடந்தது. அடுத்த நாள் காலை, அடுத்த நாள் காலை என ஒவ்வொரு நாளும் நாசிக் நகரத்தின் இந்த வேடிக்கையை ரசித்தபடி, சூரியன் கிழக்கு மேற்காக நகர்ந்துகொண்டு இருந்தான். இன்று எப்படியும் கலவரம் நடக்கும் எனப் பயந்து நடுங்கிய படி ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் தவிக்க, போராட்டக் குழுவினர் உறுதியாக அமர்ந்திருந்தனர். தேர்த் திருவிழாவுக்கான நாளும் நெருங்கி வந்தது.

அன்று ஏப்ரல் 8. மறுநாள் ராமர் தேரில் ஊர்வலம் வந்தே ஆக வேண்டும். கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டால்தான், ராமர் வெளியில் வந்து தேரில் அமர முடியும். இக்கட்டான சூழலில் வேறு வழி தெரியாமல், கோயில் நிர்வாகத்தினர் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மறுநாள் எங்களுடன் தாழ்த்தப்பட்டவர்களும் சேர்ந்து தேரை இழுக்கட்டும் என வழிக்கு வந்தனர்.

அவர்களின் சதித் திட்டம் அறியாத அம்பேத்கர் சம்மதித்தார். ஒரு மாதமாக அடைக்கப்பட்ட கதவுகள் திறந்தன. மறுநாள் தேரை இழுக்கச் சென்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். அறிவித்த நேரத்துக்கு முன்னதாகவே அவசர அவசரமாக கோயில் நிர்வாகத்தினரும், பிராமணர்களும், இதர சாதி இந்துக்களும் கூட்டு சேர்ந்து, தேரை இழுத்துச் சென்றனர். தகவல் தெரியவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவேசத்துடன் தேரை நோக்கி ஓட, போலீஸார் அவர்களைத் தடுத்து விரட்டி அடித்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள், கடவுளின் பேரால் மீண்டும் ஒருமுறை முதுகில் குத்தப்பட்டனர்.

தொடர்ந்து நடந்த கலவரங்களின் முற்றுப்புள்ளியாக, பெருஞ்செல்வந்தரான பிர்லா நேரில் வந்து, அம்பேத்கரைச் சந்தித்து, போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். இதனால் 1935 வரை நாசிக்கின் புகழ்மிக்க அந்தக் கோயில் மூடியே இருந்தது.

தன் சொந்த நாட்டில், தங்கள் மேல் ஒரு மதம் திணிக்கப்பட்டு, அதேசமயம், அதற்கான உரிமைகளும் மறுக்கப்பட்டு இழிவு படுத்தப்படுவதை இன்னும் எத்தனை நாள்தான் சகித்துக்கொள்வது எனும் வேதனைகொண்டார் அம்பேத்கர். வெறுமனே காங்கி ரஸின் கொள்கைகளான தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம், சமபந்தி உணவு என இவற்றால் மட்டுமே தன் சமூகத்துக்கு விடிவுக்காலம் ஏற்படாது. முறையான அரசியல் வாழ்வுரிமையின் மூலமாகத்தான் எதிர்காலச் சந்ததியினருக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் எனத் தெளிவாக உணர்ந்தார். அதிலும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, இந்த உரிமைகளைப் போராடிப் பெற்றால்தான் உண்டு. அவர் களிடமாவது ஒரு பொது நியாயத்தை எதிர்பார்க்கலாம், அவர்கள் போனபின், காலங்காலமாக மதத்தில் ஊறிக்கிடக்கும் உயர் சாதிகள் ஆட்சிக்கு வந்தால், தம் மக்களுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது என்ற தெளிவில் இருந்தார். அவரது இந்த எதிர்பார்ப்பை ஈடு செய்வது போல் வந்தது… 1930, நவம்பர் 12.

இந்திய வரலாற்றுக்கே திருப்புமுனை நாளாகவும் அமைந்த அந்தப் பொன்னாளில்தான் லண்டனில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இந்தியர்களின் வாழ்வுரிமைக்காக, அரசியலமைப்புச் சட்டங்களில் ஓரளவு சீர்திருத்தத்தை மேற்கொள்வது மாநாட்டை நடத்திய பிரிட்டிஷ் ஆட்சியரின் நோக்கம். காந்தியின் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் பேரியக்கம், தீவிரமாக ஒத்துழையாமை இயக்கத்தைக் கடைப்பிடித்துவந்ததால், இந்த மாநாட்டுக்கான அழைப்பைப் புறக்கணித்தனர். காந்தியும் நிராகரித்தார். ஆனால், அம்பேத்கர் தனது மக்க ளுக்கான நியாயமான வாழ்வுரிமைகளை யும் அரசியல் சமத்துவத்தையும் பெற இது சரியான சந்தர்ப்பம் என அழைப்பை ஏற்று லண்டனுக்கு விரைந்தார். அம்பேத்கருடன் சாப்ரூ, ஜெயகர், மூஞ்சே, சென்னையைச் சேர்ந்த ரெட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட பிரமுகர்களும் பல்வேறு சமஸ்தான மன்னர்களும் மாநாட்டில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கரின் மேல் மட்டும் கடும் கோபம்கொண்டனர். இந்தியாவுக்கு துரோகம் இழைக்கும்விதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியினருடன் கூட்டு சேர்ந்துவிட்டதாகத் தூற்றினர். சுபாஷ் சந்திரபோஸ§ம் கடுமையாக விமர்சித்து பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டார். ஆனால், அம்பேத்கர் அந்த வலிகளைத் தன் நெஞ்சில் தாங்கியவராக, மாநாடு நடைபெற்ற செயின்ட் ஜேம்ஸ் அரண்மனைக்குள் அடியெடுத்துவைத்தார்.

மதத்தின் பேரால் அடிமைகளாக்கப்பட்டு, அவமான இருட்டில் வாழும் ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் குரல்கள் அவர் மனசுக்குள் ஒருசேர ஒரு சொல்லைக் கூவின. அது… ‘விடுதலை’!

நன்றி :விகடன்(அஜயன் பாலா)
-சரித்திரம் தொடரும்





குளத்தில் குளிக்கவோ, குடிக்கவோ, தண்ணீர் மறுக்கப்பட்டு இருந்தது?

6 09 2008

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது!

-அம்பேத்கர்

1927, மார்ச் 19…

பம்பாய், கொலாபா மாவட்டத்தின் மஹத் கிராமத்தில், அன்று எங்கு திரும்பினாலும் முண்டாசுத் தலைகள். மகாராஷ்டிரம் முழுவதுமிருந்து வந்து குவிந்திருந்தனர். உள்ளூர் காவல் தெய்வமான வீரேசுவரர் பேரில் போடப்பட்ட மாநாட்டுப் பந்தலில், குத்துக்காலிட்டு அமர்ந்தபடி, புதிய வரலாற்றை எழுதப்போகும் அந்த நொடிக்காகக் காத்திருந்தனர். அவர்கள் அங்கே கூடியதற்குக் காரணம், சௌதாகர் குளம்!

மகர்களான தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் அந்தக் குளத்தில் குளிக்கவோ, குடிக்கவோ, தண்ணீர் மறுக்கப்பட்டு இருந்தது. ஆகாயத்தையோ, காற்றையோ அளக்கத் தெரியாத மூடர்களிடம் தண்ணீர் மட்டும் வசமாக மாட்டிக்கொண்டது. அந்தப் பகுதியில் வேறு எங்கும் போதிய தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால், தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.

பம்பாய் மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்க, மகர்களுக்கு அந்தக் குளத்தில் தண்ணீர் எடுக்க உரிமை உண்டு என உத்தரவு வந்தது. ஆனாலும், பிராமணர்களும் இதர உயர் சாதியினரும் சேர்ந்து மகர்களை அங்கே நீரெடுக்கவிடாமல் அனுமதி மறுத்த தகவல், அம்பேத்கரின் கவனத்துக்கு வந்தது.

கேரளத்தின் வைக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோயில் வீதியில் நடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டபோது, பெரியார் நேரடியாகச் சென்று போராட்டத்தில் குதித்து வெற்றிவாகை சூடிய கதை அம்பேத்கரின் நினைவுக்கு வந்தது. அதிரடியாகக் களத்தில் இறங்கினார் அம்பேத்கர். மஹத்தில் பிரமாண்டமான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.

சுரேந்திர நாத், சுபேதர் சவக்கர், ஆனந்த்ராவ் சித்ரே ஆகியோர், மகாராஷ்டிராவின் கிராமங்களுக்கு நேரில் சென்று மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். அதன் விளைவுதான், அன்று வீரேசுவரர் பந்தலில் கூடியிருந்த முண்டாசுகள்.

அம்பேத்கர் மேடையில் ஒலிவாங்கியின் முன் வந்து நின்றார். ”சில ரொட்டித் துண்டுகளுக்காக மனித உரிமையையே விற்பது மானங்கெட்டத்தனம்” வழக்கம் போல, அவரது சுளீர் சாட்டையடிப் பேச்சு, மக்களை உணர்ச்சி அலைகளின் மீது ஓடமாகத் தத்தளிக்கவைத்தது. ”எந்தக் குளத்தில் நமக்கு நீர் மறுக்கப்பட்டதோ, அந்தக் குளத்தை நோக்கி நடப்போம்” என உத்தரவிட்டார்.

அடுத்த நொடி, சௌதாகர் குளம் நோக்கி பெரும் ஜனத்திரள் புதிய சரித்திரத்தைத் தங்களது பாதங்களால் புழுதியில் எழுதியபடி நடந்து வந்தது. குளத்தின் நான்கு புறங்களையும் சுற்றி வளைத்து நின்றனர். எந்தக் குளத்தில் நீர் எடுக்கக் கூடாது என மனிதர்கள் ஒதுக்கினார்களோ, அந்தக் குளம் அவர்களின் முகங்களை வாஞ்சையுடன் பிரதிபலித்தது. முதல் ஆளாக அம்பேத்கர் ஒரு கை நீர் அள்ளிப் பருகினார். பின் அனைவரும் இறங்க, குளம் கொண்டாட்டக் களம் ஆகியது.

மீண்டும் அனைவரும் மாநாட்டுப் பந்தலுக்குத் திரும்பிக்கொண்டு இருந்தனர். திடீரென எங்கிருந்தோ வந்த உயர் சாதிக் கும்பல், கையில் தடிகளுடன் கூட்டத்தின் ஒரு பகுதியினரைக் கடுமையாகத் தாக்கத் துவங்கியது. ஒட்டுமொத்த கூட்டமும் வீரேசுவரர் கோயிலுக்குள்ளும் இன்னும் இதர கோயில்களுக்குள்ளும் நுழையப் போவதாக யாரோ கிளப்பிவிட்ட வதந்திதான் அவர்களது கோபத்துக்கும் வன்முறைக்கும் காரணம்.

மாநாட்டுப் பந்தலில் இருந்த அம்பேத்கரிடம், அடிபட்டவர்கள் வந்து கதற, அனைவரும் கொதித்து எழுந்தனர். ஆனால், ”வன்முறை ஒருக்காலும் நம் பிரச்னைக்குத் தீர்வாகாது. அது திசை திருப்பிவிடும்” என எல்லோரையும் அஹிம்சை வழியில் நடக்குமாறு அறிவுறுத்தினார் அம்பேத்கர்.

பிரச்னை இதோடு முடியவில்லை. போராட்டத்தால் ஏற்பட்ட தீட்டைக் கழிக்க உயர் சாதியினர் 108 குடங்களுடன் மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றைக் குளத்தில் கொட்டி தண்ணீரை மீண்டும் ஒரு முறை தங்களது அறிவீனத்தால் களங்கப்படுத்தினர். செய்தி கேள்விப்பட்ட அம்பேத்கரின் மனம் வேதனைக்குஉள்ளானது.

இப்படிச் சிக்கின நூல்கண்டாக அறிவீனத்தில் மாட்டிக்கொண்டு இருக்கும் மக்களை எப்படி விடுவிப்பது என யோசித்தார். அப்போது அவருக்கு விடையாகத் தெரிந்தது ‘மனு’!

மனு சாஸ்திரத்தால்தான் மனிதர்களை மனிதர்கள் வெறுக்கும் இந்த அவலம் இந்தியாவில் காலங்காலமாகத் தொடர்கிறது. ஆகவே, மனிதர்கள் வெறும் நிழல்கள்தான். மனுதான் நம் மூல எதிரி எனும் முடிவுக்கு வந்தார். விளைவு, 1927 டிசம்பர் 23ம் நாளில் மீண்டும் மஹத்தில் கூடியது மகர்களுக்கான மாநாடு.

தொண்டர்கள் அதே உற்சாகத்துடன் கூடினர். காந்தியின் புகைப்படத்தை மையமாகக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த மாநாட்டு மேடையில், பிராமணர் உட்பட பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் அம்பேத்கர் மனுதர்ம சாஸ்திரத்தைத் தீ வைத்துக் கொளுத்தி, தீண்டா மைக்கு எதிரான யுத்தத்தைத் துவக்கினார்.

மகத்தான இந்த மஹத் போராட்டத்துக்குப் பின் அம்பேத்கரின் புகழ் இந்தியா முழுக்கப் பரவியது. வன்முறை இல்லாமல், அதே சமயம் உறுதிப்பாட்டுடன் தனது எதிர்ப்பினைத் தெரிவித்து சனாதனங்களுக்கு முடிவுரை எழுதும் அம்பேத்கரின் அணுகுமுறை இந்தியாவின் இதர தலைவர்களிடத்தும் தாழ்த்தப்பட்ட மக்களிடத்தும் பெரும் நன்மதிப்பை உருவாக்கித் தந்தது.

1930, அன்றைய இந்தியாவே காந்தியின் அடுத்த உத்தரவுக்காக, கொந்தளித்துக்கிடந்த நேரம். உப்பு சத்தியாகிரகத்தின் பொருட்டு அவர் தண்டி யாத்திரையைத் துவக்குவதற்குச் சரியாக 10 நாட்களுக்கு முன் அம்பேத்கர் தனது அடுத்த போராட்டத்துக்காக நாசிக் நகருக்குப் புறப்பட்டார். காரணம், அங்கே இருந்த ராமர் கோயில்.

அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் சட்டமாக உத்தரவு பிறப்பித்த பிறகும் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க நிர்வாகத்தினர் மறுத்து வந்தனர். இதற்குத் தீர்ப்பு எழுதும் நேரத்துக்காகக் காத்திருந்த குழுவினருக்கென்றே அந்தக் கோயில் திருவிழாவும் நெருங்கி வந்தது. தேர்த் திருவிழா ஏப்ரல் 9. அதற்கு இன்னும் சரியாக ஒரு மாத கால அவகாசம் இருக்கும் சூழலில், மார்ச் 3ம் தேதி ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேர் நாசிக்கில் அம்பேத்கர் தலைமையில் கூடினர்.

நான்கு நான்கு பேர்களாக அவர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டனர். நாசிக்கில் அந்த ஊர்வலம் அமைதியாக ராணுவ ஒழுங்குடன் கோயிலை நோக்கிப் புறப்பட்டது. தகவல் அறிந்து கோயிலின் நான்கு கதவுகளும் அவசரமாக அடைக்கப்பட்டன!

-சரித்திரம் தொடரும்

நன்றி : விகடன்(அஜயன் பாலா)





புதிய எழுச்சி

6 09 2008

நீ அறிவைத் தேடி ஓடினால், வரலாறு உன் நிழலைத் தேடி ஓடி வரும். இதுதான் உலக நியதி!

இந்த நியதியின் மிகச் சிறந்த இலக்கணம் அம்பேத்கர்.

அன்று அவருக்குத் தன் வாழ்க்கையே ஒரு வரலாறாக ஆகப்போகிறது என்றோ, வருங்கால இந்தியர்களால் தான் ஒரு நாயகனாக மகுடம் சூட்டப்படுவோம் என்றோ கனவி லும் யோசித்திருக்க வாய்ப்பு இல்லை. அன்று அவரிடம்இருந்ததெல்லாம் அறிவின் எல்லையைக் காணும் வெறி! அதனால்தான், பாதியில் விட்ட படிப்பைத் தொடர இரண்டா வது முறையாக லண்டன் வந்த அம்பேத்கர், தடதடவென அதிவேக ரயிலைப் போல மூன்றே வருடங்களில் மூன்று பட்டங்களைத் தன் அறிவின் அடையாளங்களாக மாற்றிக் கொண்டார். 1921ல் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டத்தையும், அடுத்தடுத்த வருடங்களில் பொருளாதாரத்தில் எம்.எஸ்ஸி., மற்றும் டி.எஸ்ஸி., போன்ற ஆய்வுப் பட்டங்களையும் தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொண்டபோது, லண்டன் கிரேஸ் இன் பேராசிரியர்களே ஆச்சர்யத்தில் மூழ்கினர்.அதற்காக அம்பேத்கர் மேற்கொண்ட கடின உழைப்பும், தியாகங்களும், அடைந்த அவமானங்களும் வார்த்தைகளைக் கடந்த வலி நிரம்பியவை.

லண்டன் மியூஸிய நூலகம். கார்ல் மார்க்ஸ், மாஜினி, லெனின் என உலகின் தலை சிறந்தமனிதர் களையும், தலைவர்களையும் உருவாக்கியிருக்கும் பெருமை மிக்க அந்த நூலகம்தான் அம்பேத்கருக் கும் அந்த மூன்று ஆண்டுகளில் தாயின் மடியாகவும், தந்தையின் தோளாகவும் விளங்கியது. ஒவ் வொரு நாளும் காலையில் நூல கம் திறக்கப்படுவதற்கு முன்பே, கடும் குளிரையும் பொருட் படுத்தாது நடுங்கிக்கொண்டே வாசலில் வந்து நிற்கும் அம்பேத் கர், மாலையில் கடைசி ஆளாகத் தான் வெளியேறுவார். இல்லை இல்லை… வெளியேற்றப்படுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மறைவிடத்தைத் தேடிக் கண்டு பிடித்து, புத்தகங்களுடன் அங்கே பதுங்கிவிடுவார் அம்பேத்கர். இடையில் சாப்பிட்டோமா இல் லையா என்பதுகூட அவருக்கு நினைவிருக்காது. மாலை நான்கு மணி ஆனதும், நூலகக் காவலர் புலம்பிக்கொண்டே அம்பேத்கரை ஒவ்வொரு அறையாகத் தேடிக் கண்டுபிடித்து வெளியேற்றுவது தனிக் கதை. என்றாலும், காவலர் அம்பேத்கரை ஒருநாளும் கடிந்து கொண்டது இல்லை. ஏனென் றால், அவருக்கு ஒரு பழைய கதை தெரியும். இதே நூலகத்தில் இது போலவே பல வருடங் களுக்கு முன், அப்போது இருந்த காவலருக்கு ஒருவர் டிமிக்கி கொடுத்துக்கொண்டு இருந்தார். அவர்தான் பின்னாளில் கார்ல் மார்க்ஸ் எனும் மகத்தான மேதையாக அறியப்பட்டார். இது போல அந்த நூலகம் உருவாக்கி இருக்கும் பல மேதைகளின் கதை அந்தக் காவலருக்குத் தெரியுமாத லால், தனக்குச் சிரமம் வைக்கா மல் கண்டுபிடிப்பதற்குச் சுலப மான இடத்தில் அமர்ந்து படிக் கும்படி கோரிக்கை வைப்பதோடு நின்றுவிடுவார்.

கார்ல் மார்க்ஸைப் போலவே அம்பேத்கரும் பான் பல்கலைக் கழகத்தில் படிக்க விரும்பி, ஜெர் மனிக்குச் சென்றார். அங்கு படித்துக்கொண்டு இருந்தபோது, மீண்டும் லண்டன் திரும்பச் சொல்லி ‘கிரேஸ் இன்’ கல்லூரியிலிருந்து அழைப்பு வந்தது. பொருளாதாரத்தில் அம்பேத்கருக்கு டாக்டர் பட்டம் தேடித் தந்த ஆய்வுக் கட்டுரையில் சில சொற்கள் பிரிட்டிஷ் மக்களைப் புண்படுத்துவதாகஅமைந் திருப்பதாகவும், அவற்றை மட்டும் சற்று மாற்றி எழுதித் தருமாறும் பேராசிரியர்கள் கேட்டுக்கொண் டனர். இதற்காக, அம்பேத்கர் பான் பல்கலைக் கழகக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லண்டன் திரும்ப வேண்டியதாயிற்று.

அப்போதுதான், லண்டன் நாளிதழ்களில் இந்தியாவைப் பற்றி வரும் செய்திகளில் சமீப காலமாக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற பெயர் அடிக்கடி இடம்பெறுவதை அம்பேத்கர் கவனித்தார். ‘யார் இந்த காந்தி? தீண்டாமை குறித்து ஆவேசமாகப் பேசும் இவரால், தாழ்த்தப்பட்ட மக்களுடைய வாழ்வில் உண்மை யிலேயே வெளிச்சத்தைக் கொண்டு வர முடியுமா?’ என்ற கேள்விகள் அம்பேத்கரின் மன தில் வட்டமிட்டன.

1923 ஏப்ரலில் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, காந்தியைப்பற்றியும், இந்திய தேசிய காங்கிரஸின் நடவடிக்கைகளையும் மேலும் கூர்ந்து கவனிக்கத் துவங்கினார் அம்பேத்கர்.

அன்றைய நிலையில் தாழ்த்தப் பட்டவர்கள் யாரும் கற்பனையில் கூடக் கண்டிராத மிக உயர்ந்த பட்டங்களைச் சுமந்தபடி அம் பேத்கர் நாடு திரும்பிய சம்பவம் அனைவரின் புருவங்களையும் பிரமிப்பில் உயரச் செய்தது. முதல்வராகவும், பேராசிரியரா கவும் பதவி ஏற்கும்படி பலகல்லூ ரிகள் அவருக்குத் தூண்டில்போட் டன. இனி, தன் வாழ்வு முழுமை யும் தன் மக்களுக்கானது என்ப தில் உறுதிமிக்கவராக இருந்தஅம் பேத்கர், அந்த அழைப்புகள் அனைத்தையும் நிராகரித்தார். தன் எண்ணத்துக்குத் துணையாக இருக்கும் வழக்கறிஞர் தொழி லைத் தேர்ந்தெடுத்து, அதனுள் பிரவேசித்தார். தானே தேடிச் சென்று, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க உதவிக்கரம் நீட்டினார். அதோடு நில்லாமல், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என தனி பள்ளி, தங்கும் விடுதி போன்றவற் றைக் கட்டித்தர, புதிய இயக்கம் ஒன்றை 1924 ஜூலையில் துவக் கினார். ‘பகிஷ்கரித் ஹித்தஹாரிணி சபா’ என்பதுதான் அந்த அமைப் பின் பெயர்.

ஆனால், இந்த அமைப்பு ஏற் பாடு செய்த முதல் கூட்டம் ஆளில்லாமல் ஈ ஆடியது. தாழ்த் தப்பட்ட மக்கள் அனைவரும்தத் தமது வீட்டு வாசல்களில் அமர்ந்து, இவர்கள் அப்படி என்னதான் சாதித்துவிடப் போகி றார்கள் என்பது போல அவநம் பிக்கையோடு வேடிக்கை பார்த் துக் கேலி பேசிக்கொண்டு இருந் தார்களே தவிர, யாரும் கூட்டத் தில் கலந்துகொள்ளவில்லை. இதனால், அமைப்பின் இதர தோழர்கள் உற்சாகம் இழந்தனர். அப்போது அம்பேத்கர் அவர் களிடம் கூறியவை வைர வரிகள். ”அவர்கள் வேறு யாருமல்ல! நம் சொந்தச் சகோதரர்கள். அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கு வெளிச்சத் தைக் காட்டி, சரியான பாதையில் வழி நடத்திக் கூட்டிப் போக வேண்டும்!”

சோர்ந்திருந்த தோழர்கள்இந்த வரிகளால் புத்துணர்வு பெற்றனர். உற்சாகம் அடைந்தனர். அதன் பலனாக, மூன்றே வருடங்களில் அந்த அமைப்பு பம்பாயிலும், சுற்றியுள்ள பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே விழிப்பு உணர்வை உருவாக்கியது.பொதுக்கூட்டங்க�
�ில் அம்பேத் கரின் பேச்சினால் தாழ்த்தப்பட்ட மக்களிடையே புதிய எழுச்சி உண்டானது.  அம்பேத்கரின் வீர உரைகளே அனைவரையும் அதிகம் உசுப்பியது  காரணம், தாழ்த்தப்பட்டவனின் வலியைப் பற்றி இதர சாதியினரால் அறிவுரீதியாக மட்டுமே பேச முடியும். ஆனால், அந்த வலியை ரத்தமும் சதையுமாக அனுபவித்த இன்னொரு தாழ்த்தப்பட்டவனால் மட்டுமே உண்மையாக, உணர்வுபூர்வமாக அவர்களுக்காகப் போராட முடி யும். பிறந்தது முதலே சமூகத்தால் தீண்டப்படாதவனாகவே ஒதுக்கப் பட்டு, அதன் அத்தனை கொடுமை களையும் நேரடியாக அனுபவித்த காரணத்தால், அம்பேத்கரின் விடுதலைப் பேச்சுக்கள் ஒவ்வொன் றும் சாட்டையடிகளாக விழுந்து அம்மக்களைத் துடித்தெழச்செய் தன.

”பன்னெடுங்காலமாக நீங்கள் அழுது புலம்பிக்கொண்டு இருக் கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும்போதெல் லாம் என் இதயம் வெடித்துச் சிதறுகிறது. வளர்ந்த பின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப் பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா!” எனக் கூட்டங்களில் ஆவேசமாக முழங் கினார் அம்பேத்கர். மக்கள் அலை கடலென ஆர்ப்பரித்தனர்.

விளைவு… 1927 மார்ச்சில் வெடித்தது மகத்தான ‘மஹத் குள’ப் போராட்டம்.

அம்பேத்கர் எனும் மனிதரை மகத்தான தலைவராகவும், வர லாற்று நாயகராகவும் மாற்றிய அந்த முதல் நிகழ்வுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் ‘பெரியார்’.

நன்றி : விகடன்(அஜயன் பாலா)

-சரித்திரம் தொடரும்





பயணியர் விடுதியில் அம்பேத்கர்

6 09 2008

வெற்றுடம்பில் விழும் சாட்டையடிகள் வெறும் வலிகளோடு மறைகின்றன. அதுவே, நெஞ்சில் விழும் வார்த்தை அடிகள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஏணிப்படிகளாக மாறுகின்றன. அம்பேத்கரின் வாழ்வில், அன்று இரவுபார்சி பயணியர் விடுதியில் ஏற்பட்ட அனுபவம் அத்தகையஏணிப் படிகளில் ஒன்று!

பார்சிகளுக்கு மட்டுமான அந்தப் பயணியர் விடுதியில் அம்பேத்கர் தங்க நேர்ந்ததேஒரு வேதனையான துர்ச்சம்பவம். அம்பேத்க ருக்கு பரோடா அரண்மனையில் வேலை கிடைத்ததே தவிர, தங்குவதற்கு இடமின்றி தெருத் தெருவாக அலைந்தார். தாழ்த்தப்பட்டவர் என்னும் ஒரே காரணத்துக்காக விடுதிகள் அனைத்தும் அவரை உள்ளே விடாமல் விரட்டியடித்த நெருக்கடியான சூழலில்தான், பார்சி களுக்கான இந்த விடுதி பற்றி அம்பேத்கர் கேள்விப்பட்டார். பார்சிகள் பின்பற்றும் ஜொராஷ்டிர மதத்தில் சாதிகள் இல்லை; அதனால், அவர்கள் தன்னை வெளியேற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு அங்கே சென்ற அம்பேத்கருக்குப் பின்னர்தான் தெரிந்தது, அங்கும் சாதி விஷம் தலையில் ஏறியிருக்கும் விவரம். தொடக்கத்தில் இடம் தர மறுத்த விடுதிப் பணியாளர், பின்பு அம்பேத்கரின் நிலை அறிந்து மனமிரங்கி, ஒரு சமரசத்துக்கு வந்தார். யாராவது கேட்டால் பார்சி இனத்தவன் என்று தன்னைச் சொல்லிக்கொள் ளும்படி அவரை அறிவுறுத்தி, அப்படியே குறிப்பேட்டிலும் பதிவு செய்துகொண்டு, அங்கே தங்க இடம் தந்தார். வேறு வழியே இல்லாத காரணத்தால், தன் மனசாட்சிக்கு தானே ஒரு முகமூடி அணிந்துகொண்டு அந்த விடுதியில் குடியேறினார் அம்பேத்கர். எங்கே யாருடனாவது பேசினால், தான் பார்சி இனத்தவன் இல்லை எனத் தெரிந்துவிடுமோ என்று பயந்து, யாரும் விழிப்பதற்கு முன்பே வெளியேறி, அனைவரும் உறங் கிய பின்பு விடுதிக்குத் திரும்பு வதை வழக்கமாகக் கொண்டார்.

ஒருபுறம், அரண்மனையில் தனக்குக் கீழ் பணிபுரியும்படிப் பறிவற்ற ஊழியர்களின் அவ மரியாதை; இன்னொருபுறம், எந்த நிமிடம் தான் யார் எனத் தெரிந்து, விடுதியிலிருந்து வெளியேற்றிவிடுவார்களோ எனும் பயம்..! இப்படியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் தணலில் இட்ட புழுவாக வெந்து துடித்தார் அம்பேத்கர். லண்டன், அமெரிக்கா என வெளிநாடு களுக்குச் சென்று எவ்வளவோ உயர்ந்த படிப்பு படித்தும், இந்தியா தன்னை இப்படி விலங்கினும் கீழாக மதித்து அவமானப்படுத்து கிறதே எனும் வேதனை ஒவ்வொரு நாளும் அவரை அரித்துத் தின்றது.

அன்றைய பொழுது அம்பேத் கருக்கு மோசமான நாளாக விடிந்தது. அவர் அங்கு வந்து தங்கி அன்றோடு பதினோராவதுநாள். எந்தத் தகவல், விடுதிக்காரர்களுக்குத் தெரியக் கூடாது என்று பயந்திருந்தாரோ, அந்தத் தகவல் எப்படியோ கசிந்துவிட, அனைவரும் கொதித்தெழுந்து கைகளில் கழி, கம்புகள் ஏந்தி, ‘இன்று அம்பேத்கரை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது’ எனும் முடிவோடு ஒன்று திரண்டனர்.

”உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் பார்சி என சொல்லிக்கொண்டு இங்கே நுழைந்திருப்பாய்! அயோக்கியனே… உன்னை யார் உள்ளே விட்டது? இந்த நிமிஷமே உன் பெட்டி படுக்கை களை எடுத்துக்கொண்டு இங்கி ருந்து ஓடிப் போ! இல்லாவிட்டால் உன்னையும் உன் பொருள்களை யும் தூக்கித் தெருவில் எறி வோம்!”

அவர்களின் கண்களில் கன லாகத் தகித்துக்கொண்டிருப்பது அந்த நிமிடத்திய கோபம் அல்ல; ஆண்டாண்டு காலமாக மதவாதிகளால் நெய் ஊற்றி வளர்க்கப்பட்ட சாதி எனும் நெருப்பின் சுடர் என்பதைப் புரிந்துகொண்ட அம்பேத்கர், அவர்களோடு விவா திக்கவோ சண்டையிடவோ விரும்பாதவராக, அன்று இரவே அங்கிருந்து காலிசெய்துவிடுவதாக ஒப்புக்கொண்டார். நாள் முழுக்க தங்குவதற்கு இடம் தேடி அலைந் தார். பரோடாவில் இருந்த தன் நண்பரின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் தன் நிலைமையைச் சொன்னார். ”நீ இங்கு வந்தால் என் வேலையாட்கள் வேலையைவிட்டுப் போய்விடுவார்கள். தயவு செய்து வேறு இடம் பார்த்துக்கொள்!” என்று கூறி, அம்பேத்கரை நுழையவே விடாமல் கதவை அடைத்துக்கொண்டார் அந்த மெத்தப் படித்த பண்பாளர்(!).

‘இனி, பரோடாவில் வேலை செய்ய முடியாது. காலை ரயிலில் பேசாமல் ஊருக்கு வண்டி ஏறி விட வேண்டியதுதான்!’ என முடிவெடுத்த அம்பேத்கருக்கு, அந்த நட்ட நடு இரவில் அடுத்து எங்கே சென்று அந்த இரவைக் கழிப்பது என்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் அங்கிருந்த ‘கமோதி பாக்’ பொது பூங்காவில் நுழைந்தார். இரவுகளில் தினமும் ஆடு மாடுகளுக்கும், நன்றியுள்ள சில பிராணிகளுக்கும், போக் கிடமற்ற பிச்சைக்காரர்களுக்கும் மட்டுமே உறங்க இடம் தந்து கொண்டு இருந்த அந்தப் பூங்கா, இந்தச் சமூகத்தால் குத்திக் குத்திப் புண்ணாகிப்போன இதயத்துடன் நுழைந்த அம்பேத்கரையும் அரவ ணைத்துக்கொண்டது.

மறுநாள், அதிகாலையிலேயே விடுதியிலிருந்து தன் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் அம்பேத்கர்.அவரது கால்கள் நிதானமாக ரயில் நிலையத்தை நோக்கி நடந்தன. கைகளில் தொங்கிக்கொண்டு இருந்த பெட்டியை விட, மனது அதிகமாக கனத்தது. இனி, தன் வாழ்க்கை தனக்கானதல்ல, தன் மக்களுக்கானது எனும் உறுதியானதொரு முடிவை மேற்கொண்டார். எதிர்காலம் அவரை நல்ல முறையில் வரவேற்கத் தயாராக காத்திருப்பதாக, தொலைவில் ரயில் கூவி சமிக்ஞை செய்தது.

1920, நவம்பர். லண்டன் துறைமுகத்தில் ஒதுங்கி நின்ற கப்பலிலிருந்து இறங்கினார் அம்பேத்கர். லண்டன் கிரேஸ்கல்லூரியில் முன்பு பாதியில் விட்ட படிப்பை தொடரப்போகும் உற்சாகம், அவரது முகத்தை வசீகர மாக்கியிருந்தது.

இடைப்பட்ட நாளில், காலம் சில துரிதமான மாறுதல்களை அவரது வாழ்க்கைக்கு நல்கியிருந்தது. அவமானத்துடன் பரோடாவிலி ருந்து மீண்டும் பம்பாய் திரும்பிய அம்பேத்கர், அங்கிருந்த சைடன் ஹாம் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். ஒவ்வொருநாளும், பார்சிகள் தன் முன் கழி, கம்புகளை ஆட்டி மிரட்டிய சம் பவம் அவரது நெஞ்சில் நிழலாடிக் கொண்டு இருந்தது. தனக்கு நேர்ந்த இந்தக் கதி, தாழ்த்தப் பட்டவர் எவருக்கும் இனி ஏற்ப டாத வண்ணம், அவர்களிடத்தில் முதலில் விழிப்பு உணர்வையும், எதிர்த்துப் போராடும் துணிச்ச லையும் ஏற்படுத்த வேண்டும் என உறுதிபூண்டார். தீண்டத் தகாதவர்கள் எனக் கருதப்பட்ட வர்களின் இருப்பிடங்களுக்குத் தானே நேரடியாகச் சென்று, அந்த மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்தார். அம்பேத் கரின் வரவு, அதுவரை தூங்கிக் கிடந்த பல்வேறு மகர் அமைப்பு களுக்குப் புது ரத்தம் பாய்ச்சியது.

இந்தத் தகவல்கள் ஹாப்பூரின் சிற்றரசரான சாகு மன்னருக்குத் தெரிய வந்தது. தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு இருந்த சாகு மன்னர், அம்பேத்கரைச் சந்திக்க விருப்பம் கொண்டார். இருவரது சந்திப்பின் விளைவாக, அடுத்த சில நாட்களில் புதிதாக ஒரு பத்திரிகை வெளியானது. அதில் வெளியான கட்டுரைகள், அம்பேத்கர் யார் என வெளியுலகுக்கு அடையாளம் காட்டின. அம்பேத்கரின் புகழ் மெள்ள மெள்ள பம்பாய் மாகாணத்தில் பரவத் தொடங்கியது. 1921ல் மான்கோன் எனும் இடத்தில் நடைபெற்ற தீண்டப்படாதோர் மாநாட்டுக்கு அம்பேத்கர் தலைவராக அறிவிக் கப்பட்டார். ‘அம்பேத்கர் உருவில் ஒரு மீட்பரைக் கண்டடைந்துள் ளீர்கள்’ என சாகு மகாராஜா அந்த மாநாட்டில் வெளிப்படை யாக அறிவித்தார். தொடர்ந்து, நாகபுரியில் நடைபெற்ற மாநாட்டில், அம்பேத்கரின் அறிவாற்ற லையும் நுணுக்கமான அணுகு முறையையும் கண்டு வியந்த சாகு மகாராஜா, அம்பேத்கரின் அறிவுக்கூர்மைதான் தாழ்த்தப் பட்ட மக்களின் பாதுகாப்பு அரணாக எதிர்காலத்தில் விளங்கப்போகிறது என்பதை உணர்ந்தார்.

பாதியில் நின்ற பொருளாதார படிப்பு பூர்த்தியானால், அது அம்பேத்கருக்கும் மகர் இனத் தவருக்கும் மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவுக்கே பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என சாகு மகாராஜா அன்று எடுத்த முடிவுதான், மீண்டும் அம்பேத்கரை லண்டன் கிரேஸ் இன் சட்டக் கல்லூரிக்குள் படிப்பைத் தொடர அனுமதித்தது. ஆனால், முன்புபோல அம்பேத்கரால் இம்முறை நிம்மதியாகப் படிப்பைத் தொடர முடியவில்லை. அவரின் கவனம் எல்லாம் இந்தியாவைச் சுற்றியே சுழன்றுகொண்டு இருந்தன.

அந்தச் சமயத்தில்தான், இந்தியப் பத்திரிகைகளில் ஒரு பெயர் திரும்பத் திரும்ப அடிபடுவதை அம்பேத்கர் கவனித்தார்.

அந்தப் பெயர்…

-சரித்திரம் தொடரும்